Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பதால் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய விவசாய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கலக்கும் கர்நாடக மாநில தொழிற்சாலைகளின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவமழை பொழிவின் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இம்மழைநீர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவாரப்பள்ளி அணை மூலம் தேக்கி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசடைந்த சாய கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக தென்பெண்ணை ஆற்றில் விடுவதால் அணைக்கு வரும் தண்ணீறில் மாசடைந்த கழிவுநீர் கலந்து, நிறம் மாறி நொங்கு நுரையுடன் வருகிறது.
இந்த தண்ணீரை தமிழகத்தில் உள்ள விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் போது மண் வளம் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை ஏற்படும் சூழல் உருவாகும்.
இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மத்தியரசு தலையிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் கர்நாடகா எல்லை பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அதன் அனுமதியை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.